அநியாயமாய் பறிபோன ஆறாம் வகுப்பு மாணவி உயிர் - மாலைக்குள் சிக்குவான் குற்றவாளி - போலீஸார் உறுதி
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 6 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள முனுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் ஒரு கூலி தொழிலாளி. இவரது 2 ஆவது மகள் கீர்த்திகா.
இவர் மாச்சனூர் அரசு மேல்நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கீர்த்திகா மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், கீர்த்திகாவின் பள்ளி தோழிகள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். எங்கும் காணவில்லை. இந்நிலையில், இன்று காலை கல்யாண பெரியாங்குப்பம் என்ற இடத்தில் உள்ள மாந்தோப்பில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் கீர்த்திகா சடலமாக கிடந்துள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததை அடுத்து கீர்த்திகாவின் பெற்றோர் மற்றும் கே.வி.குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கை, கால் கட்டப்பட்ட நிலையில் மாணவியின் தலையில் பாட்டிலால் தாக்கப்பட்ட ரத்தக் காயம் இருந்தது. அருகே மது பாட்டில்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் கிடந்துள்ளன. மாணவியின் சைக்கிள், புத்தகப் பை அந்த தோப்பில் வீசப்பட்டிருந்தது.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி கீர்த்திகாவை மர்ம நபர்கள் மாந்தோப்புக்கு கடத்தி சென்றுள்ளனர். அவரது சைக்கிள், பள்ளி பையை தோப்பின் ஒரு ஓரத்தில் வீசியுள்ளனர். பின்னர் கை, கால்களை கட்டிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
அவருக்கு நன்கு தெரிந்தவர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த சம்பவத்தை மாணவி வெளியே கூறிவிடுவார் என்ற பயத்தில் அவர்கள் கொலை செய்து வீசியிருக்கலாம் போன்ற கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்தும் காவல்துறையினர், கீர்த்திகாவை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் டிஜிபி அலுவலகத்தில் இச்சம்பவம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ள போலீசார் விசாரணை சரியான கோணத்தில் செல்வதாகவும், இன்று மாலைக்குள் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் மூன்று பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்ப்பயா மீதான வன்முறை நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள அதே தினத்தில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.