எங்க தெரு பெண்ணை காதலிச்சான்..கொன்றோம்: வள்ளியூர் மாணவர் கொலையில் கைதான 7 மாணவர் வாக்குமூலம்!!
நெல்லை: "எங்கள் தெரு பெண்ணை காதலித்ததால் கொலை செய்தோம்" என்று கல்லூரி மாணவன் கொலையில் கைதான 7 மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூர் அருகே உள்ள நம்பியான்விளையை சேர்ந்த சுடலைமுத்து மகன் டேவிட்ராஜா. இவர் வள்ளியூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை டேவிட் ராஜா, தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். அப்போது, ராதாபுரம் ரோட்டில் உள்ள சாஸ்தா கோவில் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது, 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்துள்ளது. அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் டேவிட் ராஜாவை தாக்கி உள்ளனர். உயிருக்கு பயந்து டேவிட்ராஜா தப்பி ஓடியபோது அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் டேவிட் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட மாணவரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வள்ளியூர் 4 வழிச்சாலையில், பனைமரத்தை வெட்டி போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாணவர்கள் தகராறு
நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் 2 சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் முன் தகராறு காரணமாக டேவிட் ராஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
7 பேர் கைது
இந்நிலையில், கொலையில் தொடர்புடைய பாபு, சந்தான சுதன், பேச்சிமுத்து பாண்டி, நயினார், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், வேல் பாண்டியன் ஆகிய 7 பேரும் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்தில் சரண் அடைய வந்தனர். தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போதே
இதில் அந்த மாணவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ''நாங்கள் வள்ளியூரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது எங்களுக்கும், டேவிட்ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். மேலும் டேவிட் ராஜா, எங்கள் தெருவுக்கு அடிக்கடி மோட்டார் சைக்கிளில் வந்து ஒரு பெண்ணை காதலித்து வந்தார். விரோதி டேவிட்ராஜா, எங்கள் தெரு பெண்ணை காதலித்தது எங்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
பழிக்குப் பழி
இதுகுறித்து கடந்த 6 மாதத்திற்கு முன் நாங்கள் டேவிட்ராஜாவை எச்சரித்தோம். அப்போது டேவிட்ராஜா, அவரது நண்பர்களுடன் வந்து எங்களை சரமாரி அடித்து உதைத்தார். இதற்கு பழி தீர்க்க அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி நாங்கள் 7 பேரும் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்தோம்" என்று கூறி உள்ளனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
கைதான 7 பேர்களிடம் இருந்தும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள், வாள், கத்தி, கற்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 7 பேரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications