நெல்லை: வாக்குச்சாவடி அருகே இருகட்சியினர் மோதல் -7 பேர் படுகாயம்
நெல்லை: நெல்லையில் கடையம் அருகே பொட்டல்புதூரில் வாக்குச்சாவடி அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கம்பு, அரிவாளுடன் தாக்கிக் கொண்டதில் காயமடைமந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர், ஆர்.சி.,துவக்கப்பள்ளியில், ஊராட்சி தலைவர் அசன் பக்கீர் ஓட்டுப்போட வந்தார். அப்போது ஓட்டுப்போட வரிசையில் நின்றுகொண்டிருந்த வாக்காளர்களிடம் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடும் படி சைகை காட்டி கூறியதாக கூறப்படுகிறது.
இதனை அங்குள்ள பூத்துக்குள் அமர்ந்திருந்த கடையம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் தி.மு.க.,வை சேர்ந்த வெள்ளத்துரை, சிங்கத்துரை, பெரியசாமி ஆகியோருக்கும் அ.தி.மு.க.,வை சேர்ந்த சுப்பிரமணியன், வெங்கடேஷ், ஆதி ஆகியோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் இதுவே கைகலப்பாக மாறியது.
ஆயுதங்களோடு இருதரப்பும் மோதிக்கொண்டதால், அரிவாள் வெட்டு விழுந்தது. காயம் பட்டவர்கள் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். இதனால் ஓட்டுப்பதிவு சிறிதுநேரம் தடைபட்டது. இதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.