மதுரை வெடிகுண்டு வீச்சு- படுகொலை: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 7 பேர் சரண்!
மதுரை: மதுரையில் ஜாதி ரீிதியிலான பழிவாங்கும் வகையில், முத்து விஜயன் என்பவர் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 30ந் தேதி மதுரை ரிங்ரோடு, சிந்தாமணி அருகே தேவர் ஜெயந்தி விழாவுக்குப் போய் விட்டுத் திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், 20 பேர் உடல்கள் கருகின. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராமர்(25), மோகன்(27), விக்னேஷ்(22), சோப்பு நாகராஜ்(20), முத்துக்கருப்பன்(20), முத்துவிஜயன்(24), கிளிகார்த்திக்(25), பங்க் மணி(20), சந்தோஷ், சந்திரசேகர்(20), சோனையா(20) ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டு கழித்து கடந்த வாரம் இவர்கள் அனைவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த 11 பேரும் மதுரை ஜே.எம்.6-வது கோர்ட்டில் தினமும் காலை, மாலை என இருவேளை கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி, அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்து கையெழுத்து போட்டுச் சென்றனர்.
வியாழக்கிழமை காலையில் அவர்களும், அவர்கள் ஆதரவாளர்களுமாக 18 பேர் காரிலும், மோட்டார் சைக்கிள்களிலும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அங்கு கையெழுத்து போட்டு விட்டு 10.45 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசாரும் சென்றனர்.
கார், தெப்பக்குளத்தைத் தாண்டி அனுப்பானடி சாலையில் சென்று கொண்டிருந்தது. தெப்பக்குளம் பகுதியை தாண்டியதும், பாதுகாப்பிற்குச் சென்ற போலீசார் வழக்கம்போல் திரும்பி விட்டனர்.
அந்த நேரத்தில் அனுப்பானடி சாலையில் உள்ள ஒரு பள்ளி அருகே 10-க்கும் மேற்பட்டவர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென்று ஆயுதங்களுடன் காரை மறித்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டில் குண்டுகளை வீசினர். இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன. ஆனால் காரில் வீசிய 6 குண்டுகள் வெடிக்கவில்லை.
இந்த நேரத்தில் பின்னால் ஆட்டோவில் வந்த சிலரும் அவர்களோடு சேர்ந்து கொண்டு, காரில் வந்த முத்துவிஜயன், மோகன், நாகராஜன், சோனையா உள்பட 8 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அந்த 8 பேரும் உயிர் பிழைக்க தப்பி ஓடினார்கள்.
பலத்த வெட்டுக்காயம் பட்ட முத்துவிஜயனை அந்த கும்பல் சுற்றி வளைத்து மீண்டும் வெட்டியது. அவர் அதே இடத்தில் முத்துவிஜயன் இறந்தார். பின்பு கொலையாளிகள் அனைவரும் ஆட்டோவிலும் காரிலும் தப்பினர்.
இந்த கொலைவழக்கு தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது. கொலையாளிகளைப் போலீஸார் தேடி வந்த நிலையில், மேலஅனுப்பானடியைச் சேர்ந்த முத்துக்குமார், கார்த்திக், சரவணன், குமரன், விஜய், அருண், ஆசைத்தம்பி ஆகிய 7 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்..












Click it and Unblock the Notifications