7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை.. சென்னையில் பயங்கரம்.. ஐ.டி. ஊழியர் கைது !
7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை, போரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை, போரூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போரூரை அடுத்த மாங்காடு மதனந்தபுரத்தில் உள்ள நிகிதா அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாபு (35). இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 7 வயது மகள் ஹாசினி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி வீட்டுக்கு வெளியே தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணையை துவங்கிய போலீசார், அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள தனியார் பள்ளியின் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை சோதனை செய்தனர். அதில் சிறுமி அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து, அந்த குடியிருப்பில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ஜஸ்வந்த் என்ற 22 வயது மெக்கானிக்கல் எஞ்சினியர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளார். இதனால் போலீஸாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், கடந்த 5 ஆம் தேதி சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தலையணையால் அழுத்திக் கொலை செய்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து, 6-ஆம் தேதி, சிறுமியின் உடலை ஒரு பையினுள் வைத்து, தாம்பரம் புறவழிச் சாலையோரம் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் ஜஸ்வந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் கிடந்த ஹாசினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தன்வந்தை கைது செய்தனர். சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.