20 பவுன் நகைக்காக 70 வயது பாட்டி கொலை... காஞ்சிபுரத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பயங்கரம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல் நிலையம் அருகிலேயே நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய காஞ்சிபுரம், பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மனைவி லோகநாயகி (70). கணவர் இறந்த பின் சொந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார் லோகநாயகி.

இந்நிலையில், நேற்று மதியம் சங்கரமடம் அருகே உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்த நகையை மீட்டு தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார் லோகநாயகி. அப்போது மர்மநபர்கள் லோகநாயகியைப் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர், லோகநாயகியின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, அவரது நகைகளை திருடர்கள் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
லோகநாயகியின் மாடி வீட்டில் முன்னர் குடியிருந்த ஷகிலா என்பவர் தனது அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்க 3 மணியளவில் வந்துள்ளார். அங்கு திறந்திருந்த வீட்டில் லோகநாயகி இறந்து கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது லோகநாயகியின் இடது காது அறுக்கப் பட்டு அவரது கம்மல் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இந்தக் கொலை நகைக்காகத் தான் நடந்ததா அல்லது போலீசை திசை திருப்ப திருட்டும் நடைபெற்றுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கும் இடையே 100 மீ., இடைவெளி மட்டுமே உள்ளது. காவல் நிலையம் அருகேயே பகல் நேரத்தில் கொலை நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications