சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்- பாஜக, காங். அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றம்!
நாடு முழுவதும் 71-ஆவது சுதந்திர தின விழா கோலாகலாமாக கொண்டாடப்பட்டது.
சென்னை: 71-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், பல்வேறு கட்சி அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
71-ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். மாநிலங்களில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
புதுவையில்...
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
உயர்நீதிமன்றத்தில்...
சென்னை உயர் நீதிமன்றத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
மாநில தேர்தல் ஆணையத்தில்...
சென்னை கோயம்பேடு அருகே உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆணையர் மாலிக் பெரோஸ் கான் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்புச் செல்வன் கொடியேற்றினார்.
டெல்லி பாஜக- காங்கிரஸ்
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசியத் தலைவர் அமித் ஷாவும், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
திமுக- காங்கிரஸ்
திமுகவின் தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கொடியேற்றினார்.
தேமுதிக கட்சி அலுவலகத்தில்...
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தேசியகொடியேற்றினார். பின்னர் நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி, அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இடதுசாரிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தா. பாண்டியனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கரய்யா, ஜி.ராமகிருஷ்ணனும் தேசிய கொடியேற்றினர்.