Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமனம்-திருமண திட்டத்தில் 2,154 கிலோ தங்கம் கொடுத்தோம்: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 4 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; திருமண உதவித் திட்டத்தின் கீழ் 2,154 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைத்து பேசியதாவது:

இந்திய நாட்டின் விடுதலைக்காக உரிமைக் குரல் எழுப்பி, நாளெல்லாம் சிறை கண்டு, அடிபட்டு, மிதிபட்டு, நாடி நரம்புகள் வலுவிழந்து, மாண்டு போன பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான சுதந்திரத் தியாகிகள்; தூக்குக் கயிற்றை துச்சமென மதித்து முத்தமிட்ட தென்புலத்து வீரபாண்டிய கட்டபொம்மன்; புலியெனச் சீறிய பூலித்தேவன்; வீரமிகு மருது பாண்டியர்; தீரமிகு தீரன் சின்னமலை; தாய்நாட்டுக் கொடி காக்க தன்னை மாய்த்துக் கொண்ட கொடி காத்த திருப்பூர் குமரன்; தாய் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட வீர வாஞ்சிநாதன், பாட்டுக்கொரு புலவன் பாரதி; தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; வீரமங்கை வேலு நாச்சியார்; வீரமங்கை வேலுநாச்சியாரின் படைத் தளபதி வீரத் தாய் குயிலி; வட இந்தியாவைச் சேர்ந்த பகத் சிங், குருதேவ், ராஜகுரு என எண்ணற்ற வீரர்களை நெஞ்சில் நினைத்து போற்றுவதற்கும்; அவர்களின் புகழை பாடுவதற்கும்; அவர்களின் தியாகங்களை நினைவு கூரவும் இந்தச் சுதந்திரத் திருநாளை நாம் இங்கே இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

சுதந்திரத்தின் இலக்கணம்

சுதந்திரத்தின் இலக்கணம்

சுதந்திரத்தின் இலக்கணம் என்ன என்பது ஒவ்வொருவரின் மனப்பாங்கைப் பொறுத்து அமைகிறது. இருப்பினும், சுதந்திரத்தின் அடித்தளமாக, ஆணிவேராக, அச்சாணியாக விளங்குவது பொருளாதாரச் சுதந்திரம். பொருளாதாரச் சுதந்திரம் என்பது இன்றியமையாத தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும்; பிறரைச் சார்ந்திராமல் சொந்தக் காலில் நிற்பதை உறுதி செய்யும் வகையிலும்; அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுதலே ஆகும். அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரம் கிடைப்பதும்; சமூகரீதியில் ஏற்றத்தாழ்வுடன் இல்லாத நிலையுமே. உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதை பறைசாற்றுவதாக அமையும்.

சுதந்திரத்தின் பொருள்...

சுதந்திரத்தின் பொருள்...

ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை;
சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பர் இந்தியாவில் இல்லையே!
என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளே சுதந்திரம் என்பதற்கான உள்ளார்ந்த பொருள்.

இதையே தான் நமது ஆன்றோர்களும் சான்றோர்களும்

இதையே தான் நமது ஆன்றோர்களும் சான்றோர்களும்

"ஏழை ஈடேற வேண்டும்;
ஏழை உரிமை பெற வேண்டும்;
சாதி பேதம் ஒழிய வேண்டும்;
ஒற்றுமை மலர வேண்டும்" என்று கூறினர்.

அறிவுக்கு முக்கியத்துவம்

அறிவுக்கு முக்கியத்துவம்

'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' பாரதி கண்ட கனவை நனவாக்கும் வகையில் "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற லட்சியத்தை இலக்காகக் கொண்டு; தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெறும் நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக எடுத்து வருகிறது"

ஏழைகள் ஏற்றம் பெறுவதற்கு அடித்தளமாக விளங்கும் அறிவைத் தரக்கூடிய கல்விக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைவருக்கும், கட்டணமில்லா கல்வி; ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடைகள், உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இவையின்றி, விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இடை நிற்றலைத் தவிர்க்கும் வகையில் பத்தாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

72,843 ஆசிரியர் பணி நியமனங்கள்

72,843 ஆசிரியர் பணி நியமனங்கள்

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 72,843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 182 தொடக்கப் பள்ளிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. உயர் கல்வியைப் பொறுத்த வரையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. தேசிய சட்டப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

2,154 கிலோ தங்கம்

2,154 கிலோ தங்கம்

அனைத்துத் தரப்பு மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, மக்கள் உடல் நலன் பேணும் வகையில் பற்பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன,

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; 12000 ரூபாய் நிதியுதவி வழங்கும் மகப்பேறு உதவித் திட்டம்; வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. இவை தவிர, புதிதாக 172 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டன்; சிறப்பு பொது விநியோகத் திட்டம்; தாலிக்கு தங்கத்துடன் 50,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கும் திருமண உதவித் திட்டம் ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு, 1,948 கோடி ரூபாய் நிதியுதவியும், 2154 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், விலையில்லா மிக்சி கிரைண்டர் மற்றூம் மின்விசிறி வழங்கும் திட்டம்; மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ஓய்வூதியத் திட்டம்; விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வண்ணம் அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள், அம்மா சிமெண்ட், அம்மா திட்டம் என எண்ணற்ற மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மின்வெட்டே இல்லையே...

மின்வெட்டே இல்லையே...

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் மின் உற்பத்தியை நாங்கள் பெருக்கி இருக்கிறோம். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் கிடைக்கப் பெறும்.

நாலாபுறமும் வளர்ச்சி

நாலாபுறமும் வளர்ச்சி

மொத்தத்தில் நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் உள்ளம் துள்ளும் அளவுக்கு துறைதோறும் ஒளி வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

தியாகிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு

தியாகிகள் ஓய்வூதியம் அதிகரிப்பு

69-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தத் தருணத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 11,000 ரூபாயாகவும்; அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் 1,881 நபர்கள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு 1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

சிறப்பு ஓய்வூதியம்

சிறப்பு ஓய்வூதியம்

இது தவிர விடுதலைப் பேராட்டத்தில் பங்கு கொண்டு நாட்டிற்காக சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகங்கள் போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள்; மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள்; முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள்; வ.உ.சிதம்பரனாரின் பேரன் ஆகியோர் பெற்று வரும் 4,500 ரூபர் சிறப்பு ஓய்வூதியம் இனி 5,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் 185 நபர்கள் பயனடைவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 11 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

உறுதிமொழி

உறுதிமொழி

ஒட்டுமொத்த வளர்ச்சி; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற லட்சியப் பாதையில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம் என்ற உறுதிமொழியை தெரிவித்து விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+