பென்ஷன் உயர்கிறது.. 75,000 அரசு வேலை..1000 முதல்வர் மருந்தகம்.. முதல்வர் ஸ்டாலின் சபாஷ் அறிவிப்புகள்
சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளதுடன், பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம், உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவை பெண்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தன்னுடைய சுதந்திர தின உரையில் பெருமிதம் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. அத்துடன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியேற்றினார்.. பிறகு சுதந்திர உரையாற்றியபோது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் இதுதான்:
தியாகிகள்: "தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம். ஆகஸ்ட் 15 ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும்.

சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது. வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மை: சுதந்திரத்திற்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதியேற்போம். மூவர்ணத்தை கொண்ட நமது தேசியக்கொடி பன்முகத்தன்மை கொண்டதாகும். மாநிலங்களுக்கு தேசியக்கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. இதுவும் ஒரு விடுதலை போராட்டம் தான். மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பது குறித்த போராட்டம். இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும், தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
இந்திய ராணுவத்தை உருவாக்கியபோது நேதாஜியுடன் கரம் கோர்த்தவர்கள் தமிழர்கள். 2021ல் தி.மு.க., ஆட்சியமைந்தது முதல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,க்கு கோவையில் திருவுருச் சிலை, விடுதலைப்போராட்ட அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் திருவுருவச்சிலை, ரெட்டமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம், தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
காலை உணவுத்திட்டம்: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 65,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தால் நாள்தோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
தமிழகம் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது. பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம், உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்டவை பெண்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது
கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், 14,54,712 பேர் நேரடியாகவும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர்" என்று உரையாற்றினார் முதல்வர்.

இதையடுத்து, முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் இதுதான்:
- 2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
- முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். பொங்கல் முதல் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும்.
- கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.
- முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் காக்க, முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் படை வீரர்கள் வங்கிகளில் ரூ ஒரு கோடி வரை கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படும்.
- தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக அதிகரிப்பு.
- வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்
- நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்தது பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும்" என்றார் முதல்வர் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications