கிருஷ்ணகிரி அருகே பஸ், கார் மீது லாரி மோதி கோர விபத்து: 17 பேர் சாவு, 28 பேர் படுகாயம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பஸ் மற்றும் கார் மீது, நிலக்கடலை ஏற்றி சென்ற லாரி மோதிய கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை எண்-7ல், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் நகரங்களுக்கு நடுவேயுள்ள மேலுமலை என்ற பகுதியில் இன்று மதியம் சுமார் 3 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.

சுமார் 42 பயணிகளுடன், கிருஷ்ணகிரி மார்க்கத்தில் இருந்து ஒசூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதன்பிறகு, பஸ்சின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீதும் லாரி மோதியுள்ளது.

இந்த சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி, 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 7 பேர் பெண்களாகும். அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம், சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுவரும், தீயணைப்பு துறை அதிகாரி கோவிந்தசாமியோ, இந்த விபத்தில் 20பேர் வரை இறந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

பஸ் மிக மோசமான அளவில் சேதமடைந்துள்ளதால் உள்ளுக்குள் இருந்து உடல்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. காயமடைந்தோரில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் சிகிச்சை பலனளிக்காவிட்டால், பலி எண்ணிக்கை உயரும் அபாயமும் உள்ளது.
படுகாயமடைந்தோர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தருமபுரி, பெங்களூரிலுள்ள மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், சேலம் சரக டி.ஐ.ஜி.நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

இந்த விபத்தால், பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு, பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

தகவல் அறிந்த தனியார் வாகன ஓட்டிகள் கிருஷ்ணகிரியிலிருந்து ராயக்கோட்டை வழியாக சுற்றிக்கொண்டு ஒசூர் சென்றனர். லாரி டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால், சாலை தடுப்பை தாண்டி தறிகெட்டு, இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications