வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது.. சென்னை, புறநகர் இருளில் மூழ்கும் ஆபத்து!
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் பராமரிப்பு பணி காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தின் மொத்த உற்பத்தி திறனான 1830 மெகாவாட் ஆகும். இங்கு மொத்தம் 2 நிலைகள் உள்ளன.
ஒன்றாவது நிலையில் உள்ள 3 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது நிலையில் உள்ள 2 யூனிட்டுகளில் தலா 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கொதிகலன் குழாயில் பழுது
இந்நிலையில் 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால் அந்த அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சரிசெய்யும் பணி
கொதிகலனில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் அனல் மின்நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

210 மெகாவாட் நிறுத்தம்
இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 1வது நிலையில் உள்ள 2வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இருளில் மூழ்கும் ஆபத்து
பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக வட சென்னை அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மின்சார தட்டுபாடு ஏற்பட்டு இருளில் மூழ்கும் ஆபத்து உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications