ஏற்காடு தொகுதியில் அமைதியாக தேர்தல்- 90% வாக்குப்பதிவு!
சேலம்: ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக முடிவடைந்தது. இத்தேர்தலில் மொத்தம் 90% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் கடந்த ஜூலை மாதம் காலமானார். இதனால் அத்தொகுதிக்கான இடம் காலியானது. இதைத் தொடர்ந்து ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் வெ.மாறனும் மற்றும் 9 சுயேச்சைகளும் போட்டியிட்டனர். மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்..
இந்த நிலையில், ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 6.30 மணிக்கே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பலத்த பாதுகாப்பு
வாக்குப் பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்தல் பார்வையாளர் ரவிபிரகாஷ் அரோரா தொகுதி முழுவதும் சென்று வாக்குப் பதிவையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டபடி இருந்தார்.

அமைதியான தேர்தல்..
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி வரை ஒருசில வாக்குச்சாவடியில் வாக்குப் போட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் 5 மணிக்கு பிறகும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

90% வாக்கு பதிவு
மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் 90% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரியும், சேலம் மாவட்ட ஆட்சியருமான மகரபூஷணம் தெரிவித்தார்.

8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை
வரும் 8ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்று நண்பகலுக்குள் முடிவு தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications