9 To 5... வீட்டிலிருந்து கொண்டு வரும் சாப்பாடு.. விஜய் டைமிங்கால் ஆச்சரியத்தில் தலைமைச் செயலகம்!
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருந்து கொண்டு வரும் மதிய உணவை அலுவலகத்திலேயே அமர்ந்து அருந்திவிட்டு பணிகளை தொடரும் விஜய், தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து வருகிறார். குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் அவர் பின்பற்றி வரும் நடைமுறைகள் கோட்டை வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

முதலமைச்சராகப் பதவியேற்ற நாள் முதல், துல்லியமான நேர தவறாமையை முதல்வர் விஜய் கையாண்டு வருகிறார். தினமும் காலையில் சரியாக 9 மணிக்குத் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடும் அவர், மாலை 5 மணி வரை தனது அலுவலகத்திலேயே இருந்து மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் துறை ரீதியான கோப்புகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.
அதேபோல் அரசியல் தலைவர்கள் பலரும் மதிய உணவிற்காக தங்களது வீட்டிற்கு செல்வது அல்லது வெளி இடங்களுக்குச் செல்வது வழக்கமாக உள்ள நிலையில், முதல்வர் விஜய் முற்றிலும் மாறுபட்ட பாணியைக் கடைப்பிடிக்கிறார். தினமும் தனது இல்லத்தில் இருந்து எடுத்து வரப்படும் மதிய உணவை, கோட்டையில் உள்ள தனது அலுவலக அறையிலேயே அமர்ந்து சாப்பிடுகிறார்.
மதிய உணவு இடைவேளை முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் தனது அரசுப் பணிகளைத் தொடங்கி விடுகிறார். முதலமைச்சரே இவ்வளவு துல்லியமாக நேரத்தைக் கடைப்பிடிப்பதால், தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்களது வேலை நேரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கோட்டை ஊழியர்கள் அனைவரும் எவ்வித தொய்வும் இன்றி, 'நேர தவறாமையை' மிகக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பில் இருந்து வாய்மொழி உத்தரவு அந்தந்த துறை செயலாளர்கள் மூலமாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications