கரூரில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 9 கவுன்சிலர்களின் பதவிக்கு ஆபத்து
கரூர்: கரூர் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 9 கவுன்சிலர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்தே தீர வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த தமிழக போக்குவரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் கரூர் நகராட்சி திருமாநிலையூர் ராயனூர் பகுதியில், புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை சார்பில் 2013ம் ஆண்டு ஜூன் மாத் 20ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசால் வெளியிட்டப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி தேமுதிக கவுன்சிலர்கள் மாலதி, ஜமுனா, நாகராஜன், திமுகவைச் சேர்ந்த ரவிக்குமார், கவுன்சிலர் நாராயணன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, மாரியம்மாள், மதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சத்தியமூர்த்தி ஆகிய ஒன்பது பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் கரூர் நகராட்சி அவசர கூட்டம் நடைபெற்றபோது பேசிய நகராட்சி துணைத் தலைவர் காளியப்பன் புதிய பேருந்து நிலைய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒன்பது கவுன்சிலர்களை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ள கவுன்சிலர்கள் மீது தமிழ்நாடு நகராட்சி சட்டப் பிரிவுகளின் கீழ் மற்றும் இதர சட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அரசு செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை மாநில தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் காரணமாக திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் 9 பேரின் பதவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications