9 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார் இலங்கை பாக் உளவாளி ஜாகீர் உசேன்!
சென்னை: சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை கோர்டில் ஆஜர்படுத்தி அவரை 9 நாள் காவலில் போலீஸார் எடுத்துள்ளனர்.
இதையடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்ற கியூ பிரிவு போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு உடந்தையாக இருந்து பல உளவு வேலைகளைப் பார்த்து வந்தார்.
இதுகுறித்த தகவல் மத்திய உளவுப் பிரிவுக்குச் சென்றது. இதையடுத்து உசேனை கண்காணித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் ஜாகீர் உசேன் தொடர்பாக இலங்கையை நெருக்க ஆரம்பித்தன.
இந்த நிலையில் சென்னைக்கு வந்த உசேனை தமிழக கியூ பிரிவு போலீஸார் மண்ணடியில் வைத்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து முக்கிய இடங்களின் வரை படங்கள், சாட்டிலைட் போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். கூட்டாளிகள் 2 பேரும் சென்னையில் பிடிபட்டனர். இவர்களில் சிவபாலன் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில்தான் உசேன் கைதான அடுத்த 2 நாட்களில் சென்னையில் குண்டுவெடிப்பு நடந்தது. இதையடுத்து உசேனைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக கியூ பிரிவு போலீசார் ஜாகீர் உசேனை முகத்தை மூடியபடி துப்பாக்கி ஏந்திய போலீசில் பாதுகாப்புடன் இன்று பகல் எழும்பூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜாகீர் உசேனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோர்ட்டில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த மாஜிஸ்திரேட் ஜாகீர் உசேனை 9 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து கியூ பிரிவு போலீசார் ஜாகீர் உசேனை பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் இருந்து அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications