அடுத்த 3 மணி நேரத்திற்கு.. 9 மாவட்டங்களில் மழையாம்.. இந்த லிஸ்டில் சென்னை கிடையாது.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (மே 29) முதல் ஜூன் 1-ம் தேதிவரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 31-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும், ஜூன் 1-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 83 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 8 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 5 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் அடுத்த 3 மணி மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications