பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை முட்புதரில் கண்டெடுப்பு- போலீஸார் தீவிர விசாரணை
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தையை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகே உள்ள முட்புதரில் குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்பதயறிந்த அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, முட்புதரினுள் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அமுதா என்ற பெண்ணுக்கு நேற்று காலை குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் நேற்றிரவு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார். மருத்துவமனையில் அளித்த தகவலில் அவரது பெயர் அமுதா, அவரது கணவர் பெயர் முரளி என்றும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications