ஆனந்தகுமார் ஆட்டோவில் பாம்பு.. எத்தனை விரட்டியும் ஒரு இன்ச் கூட நகரலையே!
ஆட்டோவில் பாம்பு இருந்ததால் பயணிகள் அச்சத்தில் ஓடினர்.
நெல்லை: பாம்புகள் ஊருக்குள் வந்ததோடு இல்லாமல் ஆட்டோவில் ஏறி பயணிக்கவும் தொடங்கிவிட்டது போல!
அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். சொந்தமாகவே ஆட்டோ வைத்திருக்கிறார். இவர் வழக்கம்போல், அம்பாசமுத்திரம் பகுதியிலிருந்து சவாரி ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.
ஆட்டோ நெல்லையை நோக்கி போய்க் கொண்டிருந்தது, பேட்டை என்ற பகுதியில் ஆட்டோ சென்றபோது, ஆட்டோவின் என்ஜினிலிருந்து 6 அடி நீளம் உடைய பாம்பு ஒன்று தலையை நீட்டிக் கொண்டு வெளியே வந்தது.
இதை பார்த்தஆட்டோவில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு வண்டியை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டார்கள். வண்டி நின்றபிறகு ஆனந்தகுமார் மற்றும் பயணிகள் கூச்சலிட்டபடியே கீழே இறங்கி ஓடினார்கள். அந்த பாம்பு என்ஜினிலிருந்து தலையை நீட்டியதோடு சரி... அங்கிருந்து ஒரு இன்ச் கூட நகரவில்லை.
அப்படியே அங்கேயே நின்றது. இதனால் ஆனந்தகுமார் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார். கடைசியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து அவர்கள் வந்து படாத பாடு பட்டு, அந்த பாம்பை பிடித்து கொண்டு போய் வனப்பகுதியில் விட்டு விட்டு வந்தார்கள்.