சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை: விருதுநகரில் 9ம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு
விருதுநகர்: சீனியர் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையிலுள்ள ஏ.பி.டி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாசிலாமணி. டிங்கர் தொழிலாளியான இவரது மகன் அஜீத்குமார், அப்பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அஜீத்குமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற அஜித்குமாருக்கு மீண்டும், அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த அஜீத்குமார், நேற்று மாலை பள்ளி முடிந்து திரும்பியதும் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்காயங்களுடன் போராடிய அஜீத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அஜீத்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் 98 சதவிகித தீக்காயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அஜீத்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இது தொடர்பாக விருதுநகர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.