சர்ச்சையில் வெள்ளலூர் "சிறுமிகள்" திருவிழா- மேலாடை அணிவிக்க விசாரணை குழு வலியுறுத்தல்!
மேலூர் அருகே வெள்ளலூரில் நடத்தப்படும் சிறுமிகள் திருவிழா தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை: மேலூர் அருகே வெள்ளலூரில் நடைபெறும் சிறுமிகள் திருவிழா தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அமைத்த குழு விசாரணை நடத்தியுள்ளது. இந்த திருவிழாவில் சிறுமிகள் மேலாடை அணிய அனுமதிக்க வேண்டும் என விழா கமிட்டியிடம் விசாரணை குழு வலியுறுத்தியுள்ளது.
வெள்ளலூரை சுற்றிய 60 கிராம மக்கள் நடத்தும் முக்கிய திருவிழா ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை மேலாடை இல்லாமல் சாமியாக அலங்கரித்து கோவிலில் 15 நாட்கள் தங்க வைப்பர்.
இந்த 15 நாட்களும் மேலாடை இல்லாமல்தான் கோவில் வீடு எனப்படும் இடத்தில் சிறுமிகள் விரதம் இருக்க வைப்பர். பெண் குழந்தைகளை மேலாடை இல்லாமல் தங்க வைப்பதும் ஊர்வலமாக அழைத்து செல்வதும் அவர்களது உரிமைகளை மீறுகிற செயல் என தற்போது புகார் எழுந்துள்ளது.
விசாரணை குழு
மதுரையைச் சேர்ந்த சோகோ டிரஸ்ட் என்கிற என்ஜிஓ இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளது. இதேபோல் சர்ச்சைகள் எழுந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ், இந்த திருவிழா குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளார்.
யார் யார்?
இக்குழுவில் டிஎஸ்பி சக்கரவர்த்தி, மதுரை தாசில்தார் தமிழ்செல்வி, சமூக நலத்துறை அதிகாரி சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆலோசகர் சோபனா, வெள்ளலூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் பாபு மற்றும் வெள்ளலூர் வி.ஏ.ஓ. ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரி சாந்தி கூறியதாவது:
நம்பிக்கை திருவிழா
இத்திருவிழா பற்றி பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினோம். அவர்களைப் பொறுத்தவரையில் மதம் சார்ந்த நம்பிக்கையாக, பாரம்பரியமாக நடத்தப்படுகிற திருவிழா என கூறுகின்றனர்.
மேலாடைக்கு வலியுறுத்தல்
அம்மனாக அலங்கரிக்கப்படும் 15 நாட்களும் சிறுமிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என்கின்றனர். நாங்கள் அந்த கிராமத்தின் பெரியவர்களிடம், சிறுமிகள் மேலாடை அணிய கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களும் ஊரில் இதுபற்றி ஆலோசனை நடத்திவிட்டு அடுத்த ஆண்டு முதல் கடைபிடிக்கிறோம் என கூறியுள்ளனர்.
கவுன்சிலிங்
இந்த ஆண்டு முக்கிய திருவிழா தொடங்கிவிட்ட நிலையில் அதிக அளவில் தலையிட முடியாது. அதேநேரத்தில் அந்த சிறுமிகளின் பெற்றோர்களை அழைத்து கவுன்சிலிங் நிச்சயம் கொடுப்போம். இது தொடர்பாக விழா கமிட்டியினர் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் தர இருக்கிறோம் என்றார்.
நிலாப்பெண் திருவிழா
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டியில் ஆண்டுதோறும் நிலாப்பெண் என ஒரு சிறுமி தேர்வு செய்யப்படுவார். அவரை சாமியாக முன்வைத்து திருவிழா நடைபெறும். பவுர்ணமி நாளில் அந்த நிலாப்பெண்ணை ஆவாரம்பூக்களால் அலங்கரித்து வழிபாடு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.