லுங்கியை மரத்தில் கட்டி தப்பிய விசாரணைக் கைதி... கோட்டை விட்ட வேலூர் சிறைத்துறையினர்!
வேலூர் மத்திய சிறையின் பின்பக்கம் இருந்த மரத்தின் மீது லுங்கியை கட்டி விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
வேலூர் : வேலூர் மத்திய சிறையில் இருந்து விசாரணைக் கைதி தப்பியோடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்கு பின்பக்க சுவற்றில் இருந்து லுங்கியை கட்டி விசாரணைக் கைதி தப்பியோடியுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரையடுத்து சின்ன கந்திலி பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று காலை 6 மணி அளவில் சிறையின் பின்பக்க சுவற்றில் வேட்டியை கட்டி அதன் மூலம் தப்பியோடி உள்ளார். இது குறித்த தகவலின் பேரில் வேலூர் மத்திய சிறை காவலர்கள் சிறையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி சகாதேவன் தப்பியதற்கு யார் உதவியது என்ற கோணத்திலும் அதிகாரிகள் சக குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக் கைதி தப்பியோடியதையடுத்து சிறையில் கைதிகளை கணக்கெடுக்கும் பணியும் தொடங்கியுள்ளது. முக்கிய குற்றவாளிகளை அடைத்து வைத்திருக்கும் வேலூர் மத்திய சிறையில் இருந்தே கைதி ஒருவர் தப்பித்திருக்கிறார் என்றால் அங்கு கண்காணிப்பு இந்த அளவில் தான் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.