"அம்மா" வரட்டும், பிறகுதான் நான் ஊர் திரும்புவேன்... அப்பல்லோ வாசலில் காத்திருக்கும் மாற்று திறனாளி
ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்பும்வரை ஊர் திரும்பப் போவதில்லை என்று 34 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனை வாசலில் மாற்றுத்திறனாளி காத்திருக்கிறார்.
சென்னை: மருத்துவமனையில் இருந்து "அம்மா" வீடு திரும்பிய பின்னரே நான் ஊர் திரும்புவேன் என்று மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ள நலத்திட்ட உதவிகளுக்கு நன்றிக்கடனாகவே தான் இங்கிருந்தபடி பிரார்த்தனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் 35வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா. செப்டம்பர் 22ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியான நாளில் இருந்தே, தினமும் பலர் அப்பல்லோ வாசலுக்கு வந்து பிரார்த்தனை செய்து விட்டு செல்கின்றனர். பல தொண்டர்கள் உருள்வலம் வருகின்றனர். நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன், 30 என்ற மாற்றுத்திறனாளி வாலிபர் கடந்த செப்டம்பர் 23ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனை வாசலிலேயே காத்துக்கிடக்கிறார். 34 நாட்களாக அவர், ஜெயலலிதாவின் பூரண உடல்நலத்துக்காக பிரார்த்தனை செய்யும் அவர், ஜெயலலிதா வீடு திருப்புவதை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். எம்.ஏ. பி.எட். படித்துள்ள இவர், சின்ன சேலம் கிராமத்தில் டியூசன் எடுத்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகளுக்காக 3 சக்கர வாகனங்களும், மருத்துவ சான்றுகளும் வழங்கியுள்ளார். தமிழக மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். எனவே, அவருக்கு நன்றி கடன் பட்டுள்ள நான் இங்கேயே அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அவர் வீடு திரும்பும் நாளில் தான் நானும் வீடு திரும்புவேன் என்று கூறி வாசலில் காத்திருக்கிறார் மணிவண்ணன்.
இவருக்கு அம்மா உணவகம் 3 வேளையும் பசியாற்றுகிறது. இவரைப் போன்ற லட்சக்கணக்கான தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.












Click it and Unblock the Notifications