கள்ளக்குறிச்சி தோப்பில் களவாணிகள்.. ஓனருக்கு 'பட்டை நாமம்'.. 128வது இளநீர் வேட்டை என போஸ்டர் வேறு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தோப்பில் புகுந்து இளநீரை திருடி குடித்துவிட்டு அங்குள்ள ஒரு புளிய மரத்தில் எச்சரிக்கை நோட்டீசை ஒட்டி வைத்து சென்றுள்ளது மர்ம கும்பல்.. செவ்விளநீர் மரங்களை வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த திருடர்கள். 128வது இளநீர் வேட்டை என்று நோட்டீஸில் குறிப்பிட்டதுடன், பிடிக்கவே முடியாது என்றும் தெனாவட்டாக கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ்.குளத்தூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 39 வயதாகும் குமரவேல் விவசாயி ஆவார். இவருக்கு எஸ்.குளத்தூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்துள்ளார். விவசாயி குமரவேல் தோட்டத்தில் தென்னை மரங்கள் ஏராளமான உள்ளன. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி அன்று குமரவேல் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு போய்விட்டார்.

குமரவேல் வெளியூர் போய்விட்டதை எப்படியோ அறிந்து கொண்ட மர்ம கும்பல் இரவோடு இரவாக அவரது தோப்புக்குள் புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி இளநீர் குலைகளை கயிறு மூலம் கீழே இறக்கி அவற்றை வெட்டி குடித்திருக்கிறார்கள். பின்னர் குமரவேலுவை எச்சரிக்கும் வகையில் அங்கு நின்ற புளிய மரத்தில் பட்டை நாமம் வரைந்த நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளார்கள்.
இதனிடையே வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய விவசாயி குமரவேல் தனது நிலத்தை பார்த்து வர பசுமாட்டுடன் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள தென்னை மரங்களில் இருந்து இறங்கி சுமார் 60 இளநீரை மர்ம கும்பல் வெட்டி குடித்ததை கண்டு திடுக்கிட்டார். இந்நிலையில் வேறு மரங்களில் இளநீர் வெட்டப்பட்டுள்ளதா என்பதை காண்பதற்காக, தனது பசுமாட்டை அங்கு நின்ற புளியமரத்தில் கட்டிப்போட்டார். பின்னர் மரங்களை தேடி தேடி சென்று பார்த்த போது, இளநீர் திருடிய கும்பல் ஒட்டிச்சென்ற நோட்டீஸ் அவரது கண்ணில் பட்டது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதில், தீர விசாரிக்காதீர்கள், இதுவே இறுதியாகட்டும், மீறி விசாரித்தால் மீண்டும் வேட்டை தொடரும் நன்றி.
வேண்டுகோள்:- செவ்விளநீர் மரங்களை வளர்க்கவும்.
எச்சரிக்கை:- எங்களை கண்டுபிடிக்க இயலாது.
இளநீரை திருடி குடித்த மர்ம கும்பல் நிலத்தின் உரிமையாளரை எச்சரிக்கும் வகையில் பட்டை நாமத்துடன் கூடிய நோட்டீசை ஒட்டிச்சென்ற சம்பவம் எஸ்.குளத்தூர் கிராமம் மற்றும் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது












Click it and Unblock the Notifications