சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்த சர்ச்சைகள்... சவால்கள்
சென்னை பெருநகரத்தின் புதிய போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இவர் சென்னையில் முன்பு பணியாற்றிய போது பல சர்ச்சைகள் சந்தித்துள்ளார்.
சென்னை: பெருநகர காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சென்னையில் பணியாற்றியபோது சர்ச்சைகளில் சிக்கியவர் ஏகே விசுவநாதன்.
1990ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஏ கே விஸ்வநாதன், தனது பணி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலில் பங்கேற்று, பல வழக்கறிஞர்கள் படுகாயமடைய காரணமாக இருந்தார் ஏ.கே.விஸ்வநாதன் என புகார் எழுந்தது.
ஆனால் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு அப்போதைய கமிஷனர் ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு என்று ஏ.கே.விஸ்வநாதன் கூறினா. இதனால் ஏகே விஸ்வநாதனுக்கும் பல போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 2009 ம் வருடம், ஏ.கே.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் செயலாளராக நியமிக்கப்படுவதாக பேச்சு எழுந்தது. ஆனால், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு விஸ்வநாதன் சிறப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
மத்திய அமைச்சர்களின் அனைத்து செயலாளர்களின் நியமனங்களுக்கும் ஒப்புதல் தரும் பிரதமரிடம், விஸ்வநாதன் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வந்ததையடுத்து, விஸ்வநாதன் நியமனத்திற்கு தடை விதித்தாக கூறப்படுகின்றது.
சொத்துக்குவிப்பு புகார்
இந்த நிலையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், தலைமைச் செயலாளருக்கு ஒரு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், ஏ.கே.விஸ்வநாதன் காஞ்சிபுரம் ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 2 கோடி மதிப்புள்ள 5.24 ஏக்கர் நிலம், பள்ளிக்கரணையில் 1.5 கிரவுண்ட் நிலம், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி கிராமத்தில் 522 ஏக்கர் நிலம் என 25 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்துள்ளார். இந்த சொத்துக்கள், இவரது வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் ஆகும்.
வழக்குப் பதிவு
இதனால், வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கியுள்ள காவல்துறை அதிகாரியான விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார். இப்புகார் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதையடுத்து, ஏ.கே. விஸ்வநாதன் மீது கடந்த 28.8.09 அன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
கைவிடப்பட்ட ஊழல் வழக்கு
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், என்.கிருபாகரன் ஆகியோர், விஜிலன்ஸ் கமிஷனர் எழுதிய கடிதம், துணை சூப்பிரண்டு தாக்கல் செய்த மனு, அரசு வக்கீலின் கோரிக்கை ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு, மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர். இதனையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரியான ஏ.கே. விஸ்வநாதன் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது.
அதிமுக ஆட்சியில் டம்மி போஸ்ட்
2011ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்றப்பட்டவுடன், ஏ.கே.விஸ்வநாதனை முக்கியத்துவம் இல்லாத இல்லாத பதவியான, கரூர் காகித ஆலை தலைமை கண்காணிப்பாளராக நியமித்தனர். இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர் சேட்டால் ஏ.கே.விஸ்வநாதன் பழி வாங்கப்பட்டார் என்ற தகவல் முதல்வர் ஜெயலலிதா வின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவை காவல்துறை ஆணையர்
தமிழகத்தில் நேர்மையாக பணியாற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகளில் ஏ.கே. விஸ்வநாதனும் ஒருவர் எனவும் பைல் வைக்கப்பட்டது. இதனையடுத்து, ஏ.கே.விஸ்வநாதன் 2012ஆம் ஆண்டு கோவை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
வகித்த பதவிகள்
1990ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் பிரிவை சேர்ந்த ஏகே விஸ்வநாதன், தருமபுரி ஏஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். மதுரை எஸ்பி, 2009ஆம் ஆண்டு சென்னை மாநகரின் கூடுதல் கமிஷனராக பணியாற்றியுள்ளார். கோவை மாநகர கமிஷனராக இருந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஏடிஜிபியாகவும் பதவி வகித்தவர். அதற்குப் பிறகு ஊர்க்காவல்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டவர் தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.