வங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரா அருகே வடமேற்கு வங்ககடல் மற்றும் அதனையொட்டியுள்ள மேற்கு மத்திய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் பரவியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் இது மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளது.
ஆந்திரா கடலோர பகுதிகளில்
இதனால் ஆந்திராவின் விசாகப்பட்டினம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிருஷ்ணா மாவட்டங்களிலும், தெலுங்கானாவின் அடிலாபாத், நிஜாமாபாத், கரீம் நகர், ரங்கா ரெட்டி, வாரங்கல், கம்மம் மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
24 மணிநேரத்தில் மழை
விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கர்ணூல், அனந்தப்பூர், சித்தூர், மெகபூப் நகர், நிஜாமாபாத் ஆகிய இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் குறிப்பிட தக்க அளவு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழகத்தில் மழை
இதன் காரணமாக வட தமிழகத்திலும், மற்ற ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரம்
இதனிடையே கேரளாவிலும், கர்நாடகத்திலும் தென் மேற்கு பருவ மழை மேலும் தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகம் மற்றும் கேரளா, லட்சத்தீவு பகுதியில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.