எழுத்தாளர் ஆ. மாதவனின் 'இலக்கிய சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகடாமி விருது
சென்னை: தமிழ் எழுத்தாளர் ஆர்.மாதவன் எழுதிய 'இலக்கியச் சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்கு இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது வழங்கப்படுகிறது.
ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஆவுடைநாயகம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர். தாயார் செல்லம்மாள். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்தவர். அவரது தந்தை குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்புடன் படிப்பை நிறுத்திய மாதவன், வேலைக்குச் சென்றார். பின்னர் சாலைத்தெருவில் ஒரு சிறு கடை வைத்தார். மாதவனின் முதல் கதை 1955ல் சிறுகதை இதழில் வெளியானது. அதன்பின்னர் தமிழில் பல சிறுகதைகளை எழுதியுளளார். இவரது சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. புனலும் மணலும், கிருஷ்ண பருந்து, தூவானம் போன்ற குறுநாவல்களும் எழுதியுள்ளார்.
இவர் தனது கதைகளில் திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை தத்ரூபமாக பதிவு செய்திருப்பது சிறப்பம்சம். 2010ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதை பெற்றார். இந்த விருதினைப் பெற்ற முதல் எழுத்தாளர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் 2014ம் ஆண்டுக்கான தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் ஆ.மாதவன் எழுதிய ‘இலக்கிய சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசால், இலக்கியத் துறைக்காக வழங்கப்படும் முக்கிய விருதுகளில் சாகித்ய அகாடமி விருதும் ஒன்று. ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2014ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு ஆ. மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு சென்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தால் இலக்கியச் சுவடுகள் என்ற இந்த தொகுப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications