அடடே! இப்படியெல்லாம் ஒரு ஹாபி.... செக்ரட்டரியேட்டை கலக்கும் இன்னொரு "செருப்பு" காமெடி
தமிழக சட்டசபை வளாகத்தில் புதிய செருப்பு காமெடி நடைபெறுகிறது.
Recommended Video
சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் மீண்டும் ஒரு செருப்பு 'கூத்து' அரங்கேறி வருகிறது.
தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்தபோது முதன்முறையாக அமைச்சரானார். அப்போது, "அம்மா தான் எனக்கு தெய்வம். அவர் இருக்கும் இடம் தான் எனக்கு கோவில். அதனால், அம்மா ஆட்சி செய்யும் தலைமை
செயலகத்தில் நான் செருப்பு அணியமாட்டேன்" என சொல்லி, அதன்படி செருப்புப் போடாமலே கோட்டைக்கு வந்து போனார் உதயக்குமார்.
அவருடைய இந்த செருப்பு பக்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனை ஜெயலலிதா ரசித்தாலும், உதயக்குமாரின் அதீதப் பக்தி காமெடியாகப் பார்க்கப்பட்டதால் அவரை அழைத்து செருப்பு அணிய உத்தரவிட்டார்.
அதன் பிறகு அவர் செருப்பு அணிந்தது வேறு கதை.
தற்போது அதேபோல ஒரு செருப்புக் காமெடி நடந்து வருகிறது.
அம்மாவுக்கு நாங்கள் தான் எல்லாம் என சொல்லி, ' அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என தனிக்கட்சித் துவக்கி நடத்தி வருகிறார் சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன். சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில், கூட்டத்தில் கலந்துகொள்ள தினமும் வரும் தினகரன், தலைமைச்செயலக வளாகத்தில் அவர் கார் வந்து நின்றதும், ஏற்கனவே அவர் அணிந்து வந்த செருப்பைக் கழட்டி வண்டிக்குள் போட்டுவிட்டு, புதிதாக ஒரு செருப்பை எடுத்து அணிந்து கொண்டு சபைக்குள்ளே செல்கிறார்.
இதனைப் பார்த்து, 'ஆஹா, இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கிறதா? ' என உற்று பார்த்தனர் அதிமுக எம்.எல்.ஏ.க்கள். இதுகுறித்து தினகரன் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, " சட்டசபைக்கு ஒரு ஜோடி செருப்பையும், வெளியே செல்லும் போது ஒரு ஜோடி செருப்பையும் பயன் படுத்துகிறார் தினகரன் என்றனர்.
மேலும் சட்டசபைக்கு பயன்படுத்தும் செருப்பை வீட்டிலிருந்தே அணிந்துக்கொண்டு வரலாமே, என அவரிடம் கேட்டோம். அவரோ, சபைக்கு வரும்போதெல்லாம் புதுபுது செருப்பை பயன்படுத்துவது அவரது ஹாபி" என்கின்றனர். தினகரனின் இந்த செருப்பு மாற்றத்தை அதிமுக தரப்பில் காமெடியாக பேசிக்கொள்கிறார்கள்.