தமிழகத்தில் முதல் முறையாக வெள்ள சேதத்தை தடுக்க வெண்ணாற்றில் கேபியான் தடுப்புச் சுவர்
தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தை தடுக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக கேபியான் என்ற புதிய தொழில் நுட்பத்தில் களஞ்சேரி வெண்ணாற்றில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மழை வெள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சத்தியகோபால் கூறியதாவது:
தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளத்தை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவிரி, வெண்ணாறு, அக்னியாறு, கல்லணை கால்வாய் கோட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அலுவலர்கள் செயற்பொறியாளர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாபநாசத்தை அடுத்த களஞ்சேரி கிராமத்தில் வெண்ணாற்றங்கரையில் புதுமையான முறையில் தமிழகத்தில் முதன்முறையாக கேபியான் என்ற முறையை பயன்படுத்தி கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கேபியான் என்றால் இத்தாலி மொழியில் இதற்கு கூண்டு என்று பொருள்.
இது ரூ.2 கோடி மதிப்பீட்டில் 500 மீட்டர் நீளத்திற்கு வெண்ணாற்றின் இடது மற்றும் வலது கரைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் கூண்டு போன்ற கம்பிகள் அமைக்கப்பட்டு, அதில் சிறு சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி நகராமல் பாதுகாக்கப்படுகிறது.
இது கான்கிரீட் சுவரைக் காட்டிலும் வலிமையானதாகும். இது 50 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும். இதன் மூலம் மழைக்காலங்களில் வெள்ள நீர் வரும்போது கரை உடைப்பேதும் ஏற்படாமல் கரையில் உள்ள மண் அரிப்பு முற்றிலும் தவிர்க்கப்படும்.
இந்த அமைப்பின் மூலமாக அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் இப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்போது விவசாய சேதங்களும் தடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் மூலம் கரையின் இருபக்கமும் பலப்படுத்தப்பட்டதால் சுமார் ஆயிரம் ஏக்கர் பயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் மோசமான நிலையில் கரை பாதிப்படைந்த 10 பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகள் கிடைத்தவுடன் தமிழக முதல்வரிடம் விரிவான அறிக்கை அளிக்கப்படும்.
பாதிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த 240 மின் கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள காலங்களில் மின் தடை ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சத்தியகோபால் கூறினார்.












Click it and Unblock the Notifications