தலை நசுங்கி இறந்த சிறுவன்... ரயில் விபத்தில் உயிர் தப்பிய பெண்ணின் பகீர் அனுபவம்
ஓசூர்: ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க போலீசாரோ, மீட்புக்குழுவினரோ உடனடியாக வரவில்லை, 2 மணிநேரம் கழித்து தாமதமாகவே வந்தனர் என்று விபத்தில் சிக்கிய பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கண்மூடி திறக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த விபத்து ஒரு கொடுமையான அனுபவம் என்றும் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் ஓசூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் பலியாகினர், 60 பேர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த ரோஷினி ஹரிஹரன்(27) தனது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

விபத்தில் முடிந்த பயணம்
"பெங்களூருவில் இருந்து கிளம்பிய அந்த இன்டர்சிட்டி ரயிலில் கோயமுத்தூருக்கு பயணித்துக் கொண்டிருந்திருந்தேன். சிறிய தூக்கம், இனிமையான இசை என சென்று கொண்டிருந்தது அந்த பயணம்.
ஆனால் இப்படி ஒரு விபத்து நேரிடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. குண்டு வெடித்தது போல பெரிய சப்தம் கேட்டது. நிலைமையை உணரும் முன்னரே எல்லாம் முடிந்திருந்தன.

புகை மண்டலம்
கண்ணை மூடிக்கொண்டேன். சற்று நேரம் கழித்த போது உயிரோடு இருப்பதை உணர்ந்தேன். நான் இருந்த டி9 பெட்டி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தொங்கிய சடலங்கள்
புகைப்படலம் லேசாக விலகியபோது ஆங்காங்கே சடலங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் தலை நசுங்கி இறந்து கிடந்தான. ஒரு பெண் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்"

மீட்புக்குழுவினர்
"காயத்தின் வலியில் ஏராளமானவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். விபத்து காலை 7.35 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், காலை 9 மணி வரை சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகளோ, மீட்புக் குழுவினரோ வரவில்லை. ஒன்றரை மணி நேரமாக சக பயணிகள் சிலர் உதவியாலும், அப்பகுதி மக்கள் உதவியாலுமே பயணிகள் சிலர் மீட்கப்பட்டனர்" என்றார் அதிர்ச்சி விலகாத ரோஷினி.

வலியோடு ஆறுதல்
தானும் உள்ளே சிக்கிக் கொண்டிருந்தலும், ரோஷினி சக பயணிகளை தேற்றியிருக்கிறார். புகை மண்டலத்தைப் பார்த்து பெட்டியில் சிக்கியிருந்த பயணிகள் தீ பிடித்திருப்பதாக அலறியபோது, "தீ பிடிக்கவில்லை, ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்டுள்ள புகைப்படலமே" என ஆறுதல் கூறியதாகவும் ரோஷினி தெரிவித்துள்ளார்.

கருப்பு வெள்ளி
நான் உட்பட பலர் காயங்களின்றி தப்பியது ஒரு அற்புதம். நான் இன்று சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பியுள்ளேன்" "பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்களுக்கு இது ஒரு கருப்பு வெள்ளி" என்றும் ரோஷினி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications