அமைச்சர் செல்லூர் ராஜூ அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகம் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீச்சு!
மதுரை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரை அலுவலகம் மற்றும் அதிமுகவின் கட்சி அலுவலகம் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான காளவாசலை அடுத்த சம்மட்டிபுரத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் எம்எல்ஏ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டுகளில் ஒன்று வெடித்தது. இதில் அலுவலகத்தின் கதவு சேதமடைந்தது.
இதனைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அருகே உள்ள அதிமுக கட்சி அலுவலம் மீதும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியதில் கோயில் அருகே உள்ள சுவர் சேதமடைந்தது. இந்நிலையில் அமைச்சர் அலுவலகத்தின் மீதும் அதிமுக அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.