எம்எல்ஏ, எம்.பி. எதுவும் வேணாம்... தொண்டர் பதவியே போதும்... ரஜினி ரசிகர்களின் போஸ்டர்
தங்களுக்கு எம்எல்ஏ பதவியும் வேண்டாம், எம்.பி. பதவியும் வேண்டாம். தொண்டர் பதவியே போதும் என்ற ரஜினி ரசிகர்களின் வித்தியாசமான போஸ்டர் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ரசிகர்களாகிய தங்களுக்கு எம்எல்ஏ பதவியும் வேண்டாம், எம்.பி. பதவியும் வேண்டாம். தொண்டர்கள் என்ற பதவியே போதும் என்ற ரஜினி ரசிகர்களின் வித்தியாசமான போஸ்டர்கள் சென்னையில் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த 21 ஆண்டுகளாக ரஜினியை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைத்து வருகின்றனர். எனினும் இத்தனை ஆண்டுகள் மௌனத்தையே பதிலாக அளித்து வந்தார் ரஜினி.
இந்நிலையில் ரஜினி காந்த், கடந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் பேசிய பேச்சிலிருந்து அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அதே சமயம் ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ரஜினிக்கு எதிர்ப்பு
கடந்த 21 ஆண்டுகளாக தமிழர்கள் பிரச்சினை குறித்து குறைந்தபட்சம் அறிக்கைகூட விடாமல் தன் வேலை பார்த்து வந்த ரஜினிகாந்த், தற்போது அரசியலுக்கு வர முயற்சிப்பது ஏன் என்றும் தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் மத்திய கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

பதவிக்காக ஆசை
இன்னும் சிலர் ரஜினி மூலம் தாங்கள் பதவி, பெயர், பணம், புகழ் சம்பாதிக்க அவரை ஆட்சிக்கு வருமாறு அழைக்கின்றனர் என்று அவரது ரசிகர்கள் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டினர். இதனிடையே நாளைய முதல்வரே என்று போயஸ் தோட்டத்தில் போஸ்டர் அடித்து ஒட்டிய நிர்வாகிகள் மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மற்றொரு போஸ்டரை சென்னை முழுவதும் ஒட்டியுள்ளனர்.

பதவி வேண்டாம்
தங்களுக்கு பணமும் வேண்டாம், பதவியும் வேண்டாம் என்றும் எம்பி பதவியும் வேண்டாம், எம்எல்ஏ பதவியும் வேண்டாம். தொண்டர் என்ற பதவியே போதும் என்று போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியப்படாது என்றாலும் இதுவரை எந்த கட்சியினரும் அவ்வாறு ஒட்டியதில்லை. பதவிக்காக அடித்து கொண்டவர்களையே பார்த்து வருகிறோம்.

தீபா பேரவை
ஜெயலலிதா பிறந்த நாளில் தொடங்கப்பட்ட தீபா பேரவையில் தொடங்கிய சில நாள்களிலேயே கட்சி பொறுப்புகள் தங்களுக்கு வழங்கவில்லை என்று தீபா வீட்டு முன்பு அடிதடியே ஏற்பட்டது. இதனால் பல்வேறு நிர்வாகிகள் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். மேலும் தங்களுக்கு பதவியோ, பொறுப்போ கொடுக்கவில்லை எனில் கட்சித் தாவும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். அதுசரி, எம்எல்ஏ பதவி வேண்டாம் , எம்.பி. வேண்டாம் என்றால் தேர்தலில் யார்தான் போட்டியிடுவது? தலைவர் எப்படிப்பா முதல்வர் ஆவார்?












Click it and Unblock the Notifications