அறுந்து விழுந்த மின்கம்பி.. மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற கலெக்டர் உயிரிழப்பு!
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற கலெக்டர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.
இவர் நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து கடந்த 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார் இவர் சொந்த கிராமமான வடக்குப்பட்டு கிராமத்தில் பண்ணை வீட்டில் தங்கி விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
ஓய்வு பெற்ற கலெக்டர்
இந்த நிலையில் இன்று தன்னுடைய நிலத்தில் உள்ள கொய்யா செடிகளை அப்புறப்படுத்துபோது பலத்த காற்று காரணமாக நிலத்தின் மேற்பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின் கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இந்த மின்கம்பி சுந்தரமூர்த்தி மீது விழுந்ததால் அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
உடனடியாக அப்பகுதி மக்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கலெக்டர் சுந்தரமூர்த்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்பலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்றொரு சம்பவம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் இன்று மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த சாலையில் அம்மன் பெட்ரோல் பங்க் அடுத்துள்ள 100 மீட்டர் தொலைவில் கார் சென்றபோது திடீரென சாலையின் கார் நடுவே திரும்பியது அப்போது அத்தாணி பகுதியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த வாழைத்தார் பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் டிரைவர் கார் மீது மோதி விபத்து ஏற்படாமல் தவிர்க்க லாரியை வலது பக்கம் திருப்பினார்.
லாரி கவிழ்ந்தது
அப்போது லாரி கார் மீது மோதாமல் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் லாரியில் வந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. லாரி கவிழ்ந்ததால் லாரியில் இருந்த வாழைத்தார்கள் சாலையில் சிதறி சேதமடைந்தன. இந்த விபத்துக் காட்சி அப்பகுதியில் இருந்த ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யில் பதிவானது. இந்த சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.