சென்னை, வானகரம் மீன் மார்க்கெட் அருகே கொள்ளையன் வெட்டிக் கொலை
சென்னை: மதுரவாயல் அருகே வானகரம் மீன் மார்க்கெட்டில் கொள்ளையன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் மார்கெட் அருகே உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர் உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுரவாயல் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.
இதில் கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த
மணிகண்டன் (எ) புறாமணி(21), என்பதும் இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் நேற்று இரவு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மணியை மர்மநபர்கள் ஓட, ஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எந்த திருட்டு வழக்கிலும் ஈடுபடமாட்டேன் என்று கூறி மணி விருகம்பாக்கம் போலீஸில் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளார். அதன் பிறகு கோடம்பாக்கத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க மணி உதவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.