செஞ்சி அரசு பள்ளியில் சோகம்.. தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவன் பலி
செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவன் சிவராமன் உயிரிழந்தார்.
செஞ்சி: செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி வட்டம் மேல் அருங்கானத்தைச் சேர்ந்த சிவராமன் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கட்டிடப் பணிகளுக்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அவற்றில் தண்னீர் சேகரிக்கப்பட்டுள்ளது. அப்படி கட்டப்பட்ட 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆறரை அடி ஆழத்துக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

இன்று வழக்கம் போல, பள்ளிக்கு வந்த மாணவன் சிவராமன் அந்த பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் மலம் கழித்துவிட்டு கால் கழுவுவதற்காக தண்ணீர் தொட்டி அருகே சென்றுள்ளார். அப்போது அவர் கால் இடறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். மாணவனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்துள்ளார். அருகில் யாரும் இல்லாததால் மாணவனைக் காப்பாற்ற முடியாததால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவர் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
மாணவன் உயிரிழந்தது பற்றி கேள்விப்பட்ட பெற்றோர்கள் மாணவனின் உடலைக் கண்டு கதறி அழுதனர். பின்னர், மாணவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கட்டட கட்டுமான ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டினர். மேலும், நீர் தேக்கிவைக்கப்பட்டிருந்த கழிவு நீர் தொட்டியை மூடி வைத்திருந்தால் சிறுவனின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
பள்ளியில் கழிவு நீர் தண்ணீர் தொட்டியில் மாணவன் சிவராமன் உயிரிழந்தது குறித்து அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மாணவனின் உயிரிழப்புக்கு நிவாரணமாக அவர்களுடைய பெற்றோருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் அளிப்பதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications