ஆஹா! விளையாடியது ஒரு குற்றமா!.. சில்வர் பாத்திரம் தலையில் சிக்கி பதறிய சிறுவன்.. கலங்கிய பெற்றோர்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாவில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒன்றரை வயது சிறுவன் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்டது. தீயணைப்புத்துறை உதவியின் மூலம் அந்த பாத்திரம் சிறுவனது தலையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிறு குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தாத்தா பாட்டிகள் அறிவுறை கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஏனென்றால் குழந்தைகள் செய்யும் அட்டகாசம் அந்த அளவுக்கு இருக்கும்.
ஓரளவு நடக்க ஆரம்பித்து விட்டால் வீட்டில் உள்ள பொருட்களையே புரட்டி எடுத்துவிடுவார்கள்.. அந்த அளவுக்கு அவர்களது சேட்டை இருக்கும். அப்படித்தான் ராணிப்பேட்டையில் ஒரு சிறுவனின் விளையாட்டு அந்த பகுதியையே பரபரப்பாக்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாவில் ஒன்றரை வயது சிறுவன் ஒருவனின் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்டு அதை எடுக்க முடியாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில் திருக்குளம் பூமி பூஜை
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் உள்ள விசாலாட்சி நகரை சேர்ந்தவர் ஜோனத். ஜோனத் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒன்றரை வயதில் ஜோவித் என்ற மகன் இருக்கிறான். ஜோவித் வழக்கம் போல் வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் உணவு சமைப்பதற்காக வைத்திருந்த பாத்திரத்தை சிறுவன் ஜோவித் வைத்து விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஜோவித் தலையில் அந்த சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்டது.
தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம்
கையால் வெளியே எடுக்க முயன்றபோது சில்வர் பாத்திரம் வெளியே வரவில்லை. தலையில் நன்றாக மாட்டிக்கொண்டது. இதனால் சிறிது நேரத்தில் சிறுவன் பயந்து அழத்தொடங்கினான். இதையடுத்து பெற்றோர் சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்ட சில்வர் பாத்திரத்தை வெளியே எடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. மேலும் சிறுவனும் அழுதுக்கொண்டிருந்ததால் சிறுவனை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்
அங்கு டாக்டர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவனின் தலையில் மாட்டிக்கொண்டிருந்த பாத்திரத்தை பத்திரமாக எடுத்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் சிறுவன் ஜோவித்துக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பத்திரமாக அவனது தலையில் மாட்டி இருந்த சில்வர் பாத்திரத்தை வெட்டி எடுத்தனர். இதையடுத்து சிறுவன் ஜோவித்துக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே அஜித் என்ற சிறுவன்..
விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்டதும்.. அதை வெளியே எடுக்க முடியாமல் தவித்ததும் அப்பகுதில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. சமீபத்தில் கூட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் அஜித் என்ற ஒன்றரை வயது சிறுவனின் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்டு அதை எடுக்க முடியாமல் தவித்த வீடியோ காட்சியும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.