செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு- ஆவடி அருகே பரிதாபம்
சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் செப்டிங் டேங்கிற்குள் தவறி விழுந்த பையன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் கணபதி நகர் கணபதி தெருவை சேர்ந்தவர் சுஜாராம். அம்பத்தூரில் அடகுக் கடை நடத்தி வருகிறார். மனைவி கவுரி தேவி. இவர்களது மகன் 7 வயதான முகேஷ் இதே பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் மகனை அழைத்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார் கவுரி தேவி. வீட்டின் அருகே வந்தபோது வழியில் உறவினர் ஒருவரை சந்தித்தார். அவரிடம் கவுரி தேவி பேசி கொண்டிருந்தார். வீட்டுக்கு செல்வதாக கூறி முகேஷ் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் கவுரி தேவியும் பின்னால் சென்றார். வீட்டில் புத்தக பை இருந்தது. முகேஷை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். எங்கும் முகேஷைக் காணாத்தால் கணவருக்கு தெரியப்படுத்தினார். அவரும் அதிர்ச்சியுடன் விரைந்து வந்து தேடி பார்த்தார்.
ஆனாலும், முகேஷ் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.இதனை அடுத்து திருமுல்லைவாயல் போலீசில் சுஜாராம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது வீட்டின் செப்டிக் டேங்கின் ஒரு பகுதி உடைந்திருந்தது. அதற்குள் பார்த்தபோது முகேஷ் இறந்து கிடந்துள்ளார்.
இதை பார்த்ததும் முகேஷின் பெற்றோர் கதறி அழுதனர். அம்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பால்ராஜ் தலைமையில் வீரர்களை வரவழைத்து முகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.