"தாரமா டாலியா” எது வேணும்? - வயிறு குலுங்க வைத்த ஃபேப் ஸ்டூடியோவின் குபீர் சிரிப்பு நாடகம்!
சென்னை: சினிமா உலகம் வந்த பின்னர் மேடை நாடகங்களின் எண்ணிக்கையும், வருகையும் குறைந்து விட்டது.
எனினும், மேடை நாடகங்களை ரசித்துப் பார்க்கும் ரசிகர்கள் சம காலத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அந்த வகையில் பாத்திமா பாபுவின் ஃபேப் ஸ்டூடியோ சார்பில் "தாரமா டாலியா" என்கின்ற நகைச்சுவை நாடகம் சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது.
சிரிக்க வைக்கும் ஃபேப்:
ஏற்கனவே "சேது வந்திருக்கேன்" என்ற நாடகத்தினை மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தரின் நினைவாக அரங்கேற்றிய இந்தக் குழுவினர் தற்போது "தாரமா டாலியா" என்று நகைச்சுவையைக் கையில் எடுத்துள்ளனர்.
பட்டிமன்றக் குடும்பம்:
பட்டிமன்றம் பார்த்தாவின் ஒரே மனைவி ராதா, மகன்கள் அனிருத், ஸ்ரீராம். அனிருத்துக்கோ சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறவில்லை. அவரை சி.ஏ பாஸ் செய்ய வைக்க குடும்பமே அல்லோகலப்படுகின்றது.
குடும்பமோ குடும்பம்:
பார்த்தாவின் அம்மா ஒரு ஞாபக மறதி சரோஜா. தன்னுடைய மருமகள் மூன்று நாட்களுக்கு முன்னர் வைத்த ரசம் மட்டும் மறக்காது அவருக்கு. இரண்டாவது மகன் ஸ்ரீராம் எப்போதும் போனிலேயே குடித்தனம் நடத்தும் சாப்ட்வேர் எஞ்சினியர். ஒரு மச்சினன் அண்ணன், அண்ணி மேல் பாசம் வைத்திருப்பவர்.
புயலாக நுழையும் தென்றல்:
திடீரென்று இவர்கள் வீட்டிற்குள் புயலாக நுழைகின்றனர் நேரு என்ற முதியவரும், அவரது மகள் இந்திராவும். பட்டிமன்றத்தில் தசரதன் ராமரை காட்டிற்கு அனுப்பி இருக்க கூடாது என்று பார்த்தா பேசிய பாயிண்டை வைத்தே அவரை மடக்கி அனிருத்தின் "லிவ்விங் ரிலேஷன்" காதலியாக வீட்டில் காலடி எடுத்து வைக்கின்றார் இந்திரா.
நேராக போய் தெரிஞ்சுக்கோங்க:
பார்த்தாவோ இந்திரா கழுத்தில் அனிருத்தை தாலி கட்ட வைத்தே தீருவேன் என்று சபதம் எடுக்கின்றார். இந்த கல்யாணச் சிக்கலையும், அனிருத்தின் படிப்பையும், வீட்டில் இதனால் ஏற்படும் குழப்படிகளையும் அழகாக நகைச்சுவை கலந்து கூறியுள்ளனர் குழுவினர். கடைசியாக என்ன நடக்கின்றது? அனிருத், இந்திரா கல்யாணமா? இல்லை இந்திராவின் ஆசைப்படி லிவ்விங் ரிலேஷன்ஷிப் தானா என நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கலக்கும் குழுவினர்:
நேருவாக வரும் சுகந்தன் சேது டூ நேருவாக சரியான கதாப்பாத்திர மாறுதல்களை கண் முன் நிறுத்தியுள்ளார். நகைச்சுவையாகட்டும், வளையும் பாங்காகட்டும் சுகந்தன் கண்டிப்பாக ஜொலிப்பார். இந்திராவான பூஜா வார்த்தைகளாலும், கண்களாலும் அழகாக பேசியுள்ளார். மடிசார் மாமியான பாத்திமா, சென்னை தமிழில் புகுந்து விளையாடும் இடம் அட்டகாசம். பார்த்தாவாக வரும் பாலாஜியின் குரலில் அவ்வளவு கம்பீரம். பாட்டியாக வரும் கல்பனாவின் மறதியும், அதனால் அவருக்கு நேருவினை கணவனாக நினைக்கும் இடமும் கலகலக்க வைத்துள்ளது. எனினும், அவர்களுடைய காதல் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். நகைச்சுவையையும் இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம்.
விடுமுறை நாளை நன்றாய்க் கழிக்கலாம்:
ராதாவாக வரும் பாத்திமா பாபு, பார்த்தாவாக வரும் பாலாஜி, இந்திராவாக வரும் பூஜா, சரோஜாவாக வரும் கல்பனா, ஸ்ரீராமாக வரும் கார்த்திக், ராட்சசனாக வரும் தேவேந்திரன், தம்பியாக வரும் சம்பத் என அனைவருமே கதாப்பாத்திரத்தில் ஊன்றி நடித்துள்ளனர். மொத்தத்தில் விடுமுறை நாள் மாலையில் நாடகப் பிரியர்களுக்கு நாடகமா, நகைச்சுவையா என ஒரு அழகான மனநிறைவினை அளித்துள்ளது "தாரமா டாலியா"!