வாட்ச்மேனின் உயிருக்கு எமனாய் வந்த அமாவாசை திருஷ்டி பூசணிக்காய்!
சேலம் அருகே அமாவாசை நாளில் உடைக்கப்பட்ட பூசணிக்காயில் வழுக்கி கீழே விழுந்த வாட்ச்மேன் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: மேட்டூர் அருகே அமாவாசை நாளில் உடைக்கப்பட்ட பூசணிக்காயில் வழுக்கி கீழே விழுந்த வாட்ச்மேன் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாளய அமாவாசை நேற்று முன் தினம் கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் உயிர் நீத்த தங்களின் முன்னோர்களுக்கு பலரும் திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.

மேலும் அமாவாசை நாளில் பூசணிக்காய் சுற்றி கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு திருஷ்டி கழிப்பது வழக்கம். அதன்படி பல இடங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் பூசணிக்காய் உடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திருஷ்டிக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காய் வழுக்கி ரங்கசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேட்டூர் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தவர் ரங்கசாமி.
இவர் நேற்று இரவு பணி முடிந்து தனது மிதிவண்டியில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது மகாளய அமாவாசையை முன்னிட்டு சிட்கோ அருகே உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காயில் மோதி கீழே சாய்ந்தார். அந்த சமயம் பார்த்து அவ்வழியாக வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் சிக்கினார் ரங்கசாமி. இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications