அடிதடி, கட்டப்பஞ்சாயத்து.. அடங்காத தேனாம்பேட்டை இளவரசி.. 340 சிறையில் அடைக்க உத்தரவு!
சென்னையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட பெண் தாதா 340 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பெண் தாதா ஒருவரை தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் 110 சட்டப்பிரிவின் கீழ் 340 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் 52 வயதான இளவரசி. இவர் மீது அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா, மது விற்பனை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரை போலீஸார் பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறையில் அடைத்துள்ளனர்.
இதையடுத்து, இளவரசி தான் இனி எந்த குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன். அப்படி மீறி நான் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் நீங்கள் எந்த தண்டனையும் வழங்கலாம் என்று ஒரு பத்திரத்தில் எழுதி உறுதி போலீஸாரிடம் உறுதியளித்துள்ளார்.
ஆனால், இளவரசி தொடர்ந்து அடிதடி, கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டுவந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தேனாம்பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் முக்கிய நபராக இளவரசி செயல்பட்டுள்ளார். இதையடுத்து, தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், இளவரசி நன்னடத்தை உறுதிமொழியை மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தனிடம் அறிக்கை அளித்தார்.
இதைத்தொடர்ந்து, துணை கமிஷனர் அரவிந்தன், தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த பெண் தாதா இளவரசியை 110 சட்டப் பிரிவின் கீழ் 340 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி, தேனாம்பேட்டை போலீஸார் நேற்று இளவரசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு குற்றவாளி இனி எந்த குற்றங்களிலும் ஈடுபட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி கொடுத்த பிறகு, அவர் ஆறு மாதங்களுக்குள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர் மீது 110 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவரை 340 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது.
அண்மையில் டெல்லியில் கேஸ்டர்களால் மம்மி என்றழைக்கப்படும் 62 வயதான பெண் தாதாவை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.