செவ்வாய்க்கு போய் என்ன புண்ணியம், சிறுநீர் கழிக்க வழி இல்லையே... யூடியூபைக் கலக்கும் ஒரு பெண்!
சென்னை: ஆண்களைப் போல "சுகவாசி"யான ஒரு உயிரினம் உலகில் எங்குமே இருக்க முடியாது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் நேராக பஸ் ஸ்டாண்ட் சுவரை நோக்கி ஓடுவார்கள். சுகமாக இயற்கை உபாதையை கழிப்பார்கள். இந்த "சுதந்திரம்" மனிதர்களில் வேறு எந்தப் பிரிவினருக்கும் இல்லை.
அதேபோல வழியில் எங்காவது உச்சா நெருக்கினால், உடனே இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கிடைக்கும் சுவர், விளக்குக் கம்பம் என ஜாலியாக நின்று விடுவார்கள். இந்த "சுதந்திரமும்" வேறு யாருக்கும் இல்லை. ரோடு, புதர், சுவர் என எல்லா இடத்தையும் ஈரமாக்கும் ஒரு உயிரினம் நாய்களுக்குப் பிறகு ஆண் இனம்தான் என்பதில் எந்த ஆணுக்குமே சந்தேகம் வரக் கூடாது.
ஆனால் பெண்களின் நிலை.. சாலையில் போகும்போது இயற்கை அழைத்தால் அவர்கள் படும் பாடு இருக்கிறதே, மிகவும் துயரமானது. இந்த துயரத்தைத்தான் ஒரு இளம் பெண் வீடியோவில் படமாக்கி பார்க்கும் அனைவரையும் நிறையவே யோசிக்க வைத்துள்ளார்.
நீங்களும் வீடியோ பாருங்கள்
ஸ்வாச்ச பாரதம் என்ற பிரசாரம் படு வேகமாக நடந்து வரும் நிலையில் இந்த வீடியோ மனதை கலங்க வைக்கிறது. இதுதான் அந்த வீடியோ, நீங்களும் பாருங்கள் (மோடியும் பார்ப்பார் என்று நம்புவோம்):
யூடியூப் வீடியோ
சிறுநீர் கழிக்கும் உரிமை என்ற பெயரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் இடம் பெறும், பெண் பொது இடத்தில் பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்க நமது நாட்டில் வசதி இல்லாததை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
13 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் பெண்கள்
ஆண்களால் இயற்கை உபாதையை அடக்கி வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. ஒரு நாளைக்கு சராசரியாக 13 மணி நேரம் வரை அவர்கள் சிறுநீரை தங்களது சிறுநீர்ப் பையில் அடக்கி வைக்கிறார்கள். காரணம், அவர்களுக்கென பொதுக் கழிப்பறை வசதி இல்லாததே. எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள்.
நகரங்களில்தான் நரக நிலை
கிராமங்களில் கூட இந்தப் பிரச்சினை இருக்காது. ஆனால் இந்த நகரங்களில்தான் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம். வெளியில் வந்து விட்டால் மறுபடியும் வீடு திரும்பும் வரை சிறுநீர் கழிப்பது என்பது பெண்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறி விடுகிறது. இதைத்தான் இந்தப் பெண் இதில் அப்பட்டமாக கூறியிருக்கிறார்.
புதருக்குப் போங்க
ஒரு பெண்ணிடம் போய் இங்கே பப்ளிக் டாய்லெட் இருக்கிறதா என்று அப்பெண் கேட்கிறார். அதற்கு அவர் அதெல்லாம் இல்லை. அங்கு போனால் புதர் இருக்கும் அதில்தான் போக வேண்டும் என்கிறார்.
கடலுக்குப் போங்க
வழியில் ஒரு ஆணிடம் எங்கே சிறுநீர் கழிப்பது, டாய்லெட் இருக்கா என்கிறார். அதற்கு அவர் இப்படியே போனால் கடல் வரும். அங்கு போய்க்கோங்க என்கிறார்.
கார் டிக்கியில்
இன்னொரு பெண்ணி்டம் இவர் அணுகியபோது பேசாமல் ஏதாவது கார் டிக்கியில் போய் விடு என்று கூறி விட்டு கூலாகப் போகிறார்.
பாய்ஸ்.. நானும் ப்ளீஸ்!
கடைசியில் சாலையோரமாக கற்களைப் போட்டு வைத்துள்ள ஒரு இடத்தில் இரண்டு ஆண்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பக்கத்தி்ல போய் இவரும் உட்கார முயல்கிறார். இவரைப் பார்த்து மிரண்டு போன அந்த ஆண்கள் ஓடாத குறையாக அந்த இடத்தை விட்டு அகலுகிறார்கள்.
மும்பையில்
இந்தக் கொடுமையெல்லாம் மும்பையில் நடந்ததுதான். ஆனால் இந்தியாவின் எந்த பெருநகரத்திற்குப் போனாலும் இதே பிரச்சினையை பெண்கள் சந்தித்தபடிதான் இருக்கிறார்கள்.
செவ்வாய்க்குப் போய் என்ன புண்ணியம்
வீடியோவின் முடிவில் செவ்வாய்க்கு நாம் போய் என்ன புண்ணியம், பெண்களால் பாதுகாப்பான முறையில் பொது இடத்தில் சிறு நீர் கழிக்க முடியவில்லையே என்று கூறியுள்ளனர்.