கால் முறிந்த காதலனுடன் காதலை முறித்த இளம்பெண்.. உயிருடன் எரித்து தானும் தீக்குளித்து இளைஞர் தற்கொலை!
சென்னை: அம்பத்தூரில் காதலை முறித்துக்கொண்ட இளம்பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்த இளைஞர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் புதூர் பானு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் என்ற 21 வயது இளைஞர் அண்ணாநகரில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அதே துணிக்கடையில் அம்பத்தூர் லெனின் நகரை சேர்ந்த மைதிலி 20 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்தார்.

ஒரே கடையில் வேலை பார்த்த போது போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
கால் முறிந்ததால் விரிசல்
இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பார்த்திபனுக்கு விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கால் முறிந்தது. இதனால் வீட்டில் பார்த்திபன் ஓய்வெடுத்தால் இருவருக்கும் இடையிலான சந்திப்பு தடைபட்டு காதலில் விரிசல் விழுந்துள்ளது.
காதலை தொடர மறுப்பு
இந்த நிலையில் கடந்த 1 வாரத்துக்கு முன்பு பார்த்திபன் மைதிலியை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பேச மைதிலி மறுத்தார். அதன் பிறகு பார்த்திபன் தினமும் மைதிலியை சந்தித்து தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் மைதிலி மறுத்ததாக தெரிகிறது.
தீக்குளிப்பேன் என மிரட்டல்
இந்த நிலையில் நேற்று இரவு திருமுல்லைவாயல் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பார்த்திபன், மைதிலியை வழிமறித்தார். தனது காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
உயிருடன் தீ வைப்பு
ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் மைதிலி சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த பார்த்திபன் மைதிலி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி உயிருடன் அவரை எரித்தார். இதனால் அலறி துடித்தார் மைதிலி. இதையடுத்து தானும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் பார்த்திபன்.
இருவரும் பலி
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்ர்த்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இருவரும் இன்று காலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் இருவரது குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications