இட ஒதுக்கீட்டுக்காக தீக்குளித்த ஆதித்தமிழர் பேரவை மாநிலத் தலைவி மரணம்
திருச்சி பொன்மலை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ராணி (41). இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ராணி ஆதித்தமிழர் பேரவை மாநில மகளிர் அணி தலைவியாகவும், பாலக்கரை கால்நடை பராமரிப்பு அலுவலகத்தில் உதவியாளராகவும் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 9.20 மணி அளவில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவுக்கு தனது ஸ்கூட்டியில் வந்த ராணி தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி கோஷம் எழுப்பியவாறு தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்தனர். ஆனால் ராணியின் உடல் பெரும்பாலும் எரிந்து போய் விட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு ராணியைக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக உயிரிழந்தார். அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும், ஜாதிக்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தீக்குளித்து உயிர் நீத்துள்ளார் ராணி.
இன்று காலை 11 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராணியின் தீக்குளிப்பு மற்றும் மரணத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.