ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் மீது தாக்குதல்!
வருமான வரித்துறை சோதனை நடைபெற்றும் வரும் ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டார்.
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசின் கான்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேகர் ரெட்டியிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமமோகன் ராவின் மகன் வீடு உட்பட 13 இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது. ஆந்திரா, கர்நாடகாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் ராமமோகன் ராவ் வீடு அருகே ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த குடியிருப்புவாசிகள் முயற்சித்தனர். ஆனால் ஆம் ஆத்மி தொண்டர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவர் ஆம் ஆத்மி தொண்டரை பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே தாக்கினார்.
இதையடுத்து அந்த தொண்டர் அங்கிருந்து வெளியேறினார்.