பலசரக்கு கடைகள் மூலம் பணம் தர்றாங்க சார்... தேர்தல் ஆணையத்தை உஷார்ப்படுத்தும் ஆம் ஆத்மி!
சென்னை: வாக்காளர்களுக்கு பலசரக்கு கடைகள் மூலம் பணப்பட்டுவாடா நடக்க விடாமல் கண்காணிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஆம் ஆத்மி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

மின்சாரத் திருட்டு...
இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசாரங்கள், கூட்டங்கள் நடத்தும்போது மின்சாரம் திருடுவதை கண்காணித்து தடுக்கவேண்டும். தேர்தல் நடத்தை விதிகளைச் சுட்டிக்காட்டி, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மக்களுக்கு வழங்க சில மருத்துவமனைகள் மறுப்பு தெரிவிக்கின்றன.

டாஸ்மாக் கடைகள்...
மக்கள் உயிர் விஷயத்தில் அரசியல் கூடாது. எனவே தெளிவான உத்தரவைப் பிறப்பித்து மக்கள் பயனடைய வகை செய்ய வேண்டும். தேர்தல் முடிவு கூறப்படும் வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும்.

பணப்பட்டுவாடா...
பல அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக தர இருக்கும் பணத்தை, தெரிந்த பலசரக்குக்கடை, மருந்து கடைகளில் பதுக்கி வைத்துள்ளனர். இந்த முறை கடைகள் வழியாக பணப்பட்டுவாடா நடக்க இருப்பதால் அதைக் கண்காணிக்க வேண்டும்.

என்ன ஆனது?
கடந்த தேர்தலின்போது ரூ.55 கோடி பணத்தை தேர்தல் கமிஷன் கைப்பற்றியது. இந்த பணம் எங்கு உள்ளது?, திருப்பித்தரப்பட்டுவிட்டதா? என்பதை தெளிவுபடுத்தவேண்டும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications