அடுத்த நவம்பருக்குள் தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள்: அதிரடித் திட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி
சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளதாக, அதன் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் அதன் கிளைகளை உறுதிபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினாசாமி நாளிதழ் ஒன்றிக்கு அளித்தப்பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-

தன்னார்வத் தொண்டர்கள்....
கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் தினமும் ஏராளமானோர் தன்னார்வ தொண்டர்களாகவும், உறுப்பினர்களாகவும் சேர்ந்து வருகின்றனர். நாளை முதல் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்த இருக்கிறோம்.

ஒரு கோடி உறுப்பினர்கள்....
இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் நவம்பர் 26-ந் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கான திட்டம் தீட்டி உள்ளோம். இதுவரை 45 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

எஸ்.எம்.எஸ் மூலம்....
எஸ்.எம்.எஸ். மூலம் விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள் சேகரித்து வைக்கப்பட்டு, சம்பந்தபட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கப்படும். பின்னர் அவர்கள், விண்ணப்பதாரர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ரசீது...
நாங்கள் நேரடியாக சேர்க்கும் நபர்களுக்கு, மாநிலத்தின் பெயர் ‘டி.என்.' என்ற குறியீட்டுடனும், அதனை தொடர்ந்து மாவட்டங்களின் குறியீடுகளுடன் கூடிய வரிசை எண் கொண்ட ரசீது வழங்கப்படும்.

கட்டமைப்பு வசதி....
அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றியம் மற்றும் கிராம பஞ்சாயத்து அளவில் எங்களது தன்னார்வ தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் முதலில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். பின்னர் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

நல்ல வரவேற்பு....
மாணவர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எங்கள் சிறப்பு முகாம்களில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே பங்கேற்க உள்ளனர். கல்லூரி சம்பந்தமான விழாக்களில் கலந்து கொள்ளுமாறு எங்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications