என் மகளை கண்டுபிடித்து கொடுங்க சாமி: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் 93 வயது தாத்தா கண்ணீர்
சென்னை: காணாமல் போன தனது 40 வயது மகளை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு 93 வயது முதியவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் மலையம் முனுசாமி முதலியார்(93). அவரது மனைவி படுத்தபடுக்கையாக உள்ளார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு மகன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். இருப்பினும் பெற்றோரை யாரும் கண்டுகொள்வது இல்லை.
முனுசாமியின் மகள் ஜெயந்தி கணவரை பிரிந்து வந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வறுமை தாங்க முடியாமல் ஜெயந்தி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். அதில் இருந்து அவரை முனுசாமி தேடி வருகிறார்.
இந்நிலையில் முனுசாமி 100 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவரால் கமிஷனரை பார்க்க முடியவில்லை. இருப்பினும் அலுவலகத்தில் இருந்த போலீசார் அவரது மனுவை பெற்றுக் கொண்டு ஜெயந்தியை கண்டுபிடித்துக் கொடுப்பதாக தெரிவித்தனர்.
இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த முனுசாமிக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் ரூ.50 அளித்து ஆறுதல் கூறினார். முனுசாமி தனது போலீஸ் மகனின் பெயரை தெரிவிக்க மறுத்துவிட்டார். பெயரை தெரிவித்தால் அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அஞ்சுகிறார்.