விஜய் இல்லாவிட்டால் செத்துவிடுவேன் என மிரட்டியவள்.. அவரையே கொல்ல துணிந்துவிட்டாளே.. புலம்பும் தந்தை!
விஜயை திருமணம் செய்து வைக்காவிட்டால் செத்துவிடுவேன் என மிரட்டிய அபிராமி அவரையே கொல்ல துணிந்துவிட்டார் என அவரது தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: விஜயை திருமணம் செய்து வைக்காவிட்டால் செத்துவிடுவேன் என மிரட்டிய அபிராமி அவரையே கொல்ல துணிந்துவிட்டார் என அவரது தந்தை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
குன்றத்தூரை சேர்ந்த வங்கி ஊழியர் அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சுந்தரத்தை வரவழைத்தும் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்றும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் அபிராமி.
இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே அபிராமியை கண்டித்து அடித்து உதைத்துள்ளார் அவரது தந்தை. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுந்தரத்தின் வீட்டிற்கே சென்றுள்ளார் அபிராமி. இதைத்தொடர்ந்து அவரை அழைத்துவந்து கணவருடன் சேர்த்து வைத்துள்ளார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன்.
30ஆம் தேதி இரவு
இந்நிலையில் சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி இரண்டு குழந்தைகளையும் கணவரையும் கொல்ல முடிவு செய்தார். தனது முடிவு குறித்து கள்ளக்காதலன் சுந்தரத்திடம் கூறிய அபிராமி அவரது ஆலோசனைப்படி கடந்த 30ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்துள்ளார்.
மூச்சை நிறுத்தி கொலை
இதில் குழந்தை கார்னிகா மட்டும் இறந்துள்ளார். மறுநாள் காலையில் மகன் அஜயும் கணவர் விஜயும் எழுந்துவிட்டதால் அதிர்ச்சியடைந்த அபிராமி கணவன் வேலைக்கு சென்ற பிறகு மீண்டும் பாலில் விஷத்தை கலந்து கொடுத்து மகனின் மூச்சை நிறுத்தி கொலை செய்தார்.
உயிர்தப்பிய கணவர்
கணவரை கொலை செய்ய சுமார் 12 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும், அது முடியாமல் போனதால் 1ஆம் தேதி அதிகாலை அங்கிருந்து தப்பினார். இதனால் கணவர் விஜய் உயிர் தப்பினார். இந்நிலையில் அபிராமி குறித்து அவரது தந்தை பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு காதல்
அவர் கண்ணீர் மல்க கூறியதாவது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அபிராமி சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சமையல் கலை படிக்க சென்றபோது, தன்னுடன் அதே பயிற்சிக்காக வந்த, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த விஜய் என்பவருடன் பழகினார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. வெவ்வேறு சமூகம் என்பதால், முதலில் நாங்கள் அவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
எதிர்ப்பை மீறி
ஆனால் அபிராமி பிடிவாதமாக விஜய்யை தான் திருமணம் செய்வேன். இல்லையென்றால், செத்துவிடுவேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தோம். ஆனால் விஜய்யின் பெற்றோர் திருமணத்திற்கு கடைசிவரை சம்மதிக்க மறுத்துவிட்டனர். இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, விஜய் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தார்.
சந்தோஷமாக இருந்த குடும்பம்
நாங்கள்தான் சென்னை குன்றத்தூரில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தோம். முதலில் சந்தோஷமாகத்தான் இருவரும் குடும்பம் நடத்தினர். இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் அபிராமியின் ஊதாரித்தனத்தால் விதி விளையாடத் தொடங்கியது. ஸ்கூட்டியால் வந்த வினை அபிராமிக்கு எப்பொழுதும் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகம்.
உல்லாசமாக சுற்றிய அபிராமி
தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதையும் மறந்து, கணவன் சம்பாதிக்கும் பணத்தை, பியூட்டி பார்லருக்கு சென்று அலங்கரித்து கொள்வது, ஓட்டலுக்கு சென்று விதவிதமாக சாப்பிடுவது என்று உல்லாசமாக சுற்றத் தொடங்கினாள். அதற்கு வசதியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவளது பிறந்த நாள் பரிசாக, கணவன் விஜய் ஆசையாக ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தான். அதில் இருந்துதான் அவளது போக்கு முற்றிலும் மாறத் தொடங்கியது. எப்பொழுதும் ஸ்கூட்டியிலேயே வலம் வரத் தொடங்கினாள்.
கணவரையே கொல்ல துணிந்தாள்
அப்போதுதான் சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டு அவளது வாழ்க்கையையும் குடும்பத்தையும் சின்னாபின்னாம்மாக்கியுள்ளது. அவளது பிடிவாதம் 2 குழந்தைகளின் உயிரை குடித்துள்ளது. விஜய் இல்லாவிட்டால் செத்துவிடுவேன் என்று கூறியவள் இன்று அவரையும் கொலை செய்ய துணிந்துவிட்டாளே என கண்ணீர்மல்க புலம்பி வருகிறார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன்.