பண்ருட்டி அருகே ஓடும் பேருந்தில் விபத்து: வெயிலுக்கு ஸ்டெப்னி வெடித்து 20 பேர் படுகாயம்
பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து 20-பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Recommended Video
பண்ருட்டி: வெயில் காரணமாக தனியார் பேருந்து மீதிருந்த ஸ்டெப்னி டயர் வெடித்ததால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், ஒருவரது கை துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சேந்தநாடு என்ற ஊரிலிருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
சின்னசேமகோட்டை என்ற இடத்தில் பேருந்து சென்றபோது, பேருந்தின் மேல்புறம் இருந்த ஸ்டெப்னி டயர் அதிகமான வெயில் காரணமாக திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் பேருந்தின் மேல் பகுதி வெடிகுண்டு வெடித்தது போல் ஓட்டை ஏற்பட்டுள்ளது. டயர் வெடித்து பேருந்துக்குள் விழுந்ததில் பயணி ஒருவருக்கு கை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக பண்ருட்டி மற்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர், இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்