கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலி... காருக்கு மக்கள் தீவைப்பு
கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி 4 பேர் பலியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து அந்த காருக்கு தீ வைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த காருக்கு தீவைத்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி துரத்தினர்.
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை திருமண வீட்டை சேர்ந்தவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
பஸ் நிறுத்தம் அருகில் கார் வந்தபோது அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலையை கடக்க முயன்றனர். இதை பார்த்த டிரைவர் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டு பார்த்தார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை.
பைக் மீது மோதல்
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அந்த பைக் மீது மோதியது. எனினும் கார் நிற்காமல் சென்று கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற திருமண கோஷ்டியினர் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் டிரைவர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
4 பேர் பலி
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும், திருமண கோஷ்டியை சேர்ந்த 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் மருதேபள்ளியை சேர்ந்த தர்மன் (40), மல்லவாடியைச் சேர்ந்த வனஜா (45) , கந்திகுப்பத்தை சேர்ந்த கோகுல்(17), பரத்குமார்(18) உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் நெட்லகுட்டை பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன்(40), ஜிஜேந்திரன்(14), ராஜ்குமார்(35) ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காருக்கு தீவைப்பு
விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி அங்கு ஓடி வந்து விபத்தை ஏற்படுத்திய காரை அடித்து நொறுக்கி, சாலையின் ஓரத்திற்கு இழுத்து சென்று தலைகுப்புற தள்ளி கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தினார்கள். இதைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் மக்கள் ஈடுபட்டனர். இதனால் கந்திகுப்பம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸார் தடியடி
வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கந்திகுப்பம் மற்றும் பர்கூர் போலீஸார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். எனினும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் மறியல் செய்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் பலியான 4 பேர் உடல்களையும் போலீஸார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.