சென்னை பேசின் பிரிட்ஜ்-அரக்கோணம் ரயில் பாதையில் விபத்து தடுப்பு கருவி பொருத்த முடிவு!
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ்-அரக்கோணம் ரயில் பாதையில் விபத்து தடுப்பு கருவி ரூ.28.5 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
சிக்னல்களை கவனிக்காமல் ரயில்களை இயக்கும்போது ஏற்படும் விபத்துகளை தடுக்க ரயில் விபத்து தடுப்பு எச்சரிக்கை கருவி பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ரயில் விபத்துகளை தடுப்பதில், இக்கருவி முக்கிய பங்காற்றுவதாக தெரியவந்துள்ளது.
ரயில் இன்ஜின் டிரைவர், சிக்னலை கவனிக்க தவறும்போது, தானியங்கி ‘பிரேக்' தானாக இயங்கி, ரயிலை நிற்க செய்து விடுமாம். இந்த கருவி பொருத்தப்பட்ட பாதையில் ஓடும் ரயில்களில், எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்ற விவரம் திரையில் காண்பிக்கப்படும்.

இந்தியாவிலும் அக்கருவியை பொருத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து சென்னை-கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் பாதையிலும், நிஜாமுதீன்-ஆக்ரா ரயில் பாதையிலும், கொல்கத்தா மெட்ரோ ரயில் பாதையிலும் விபத்து தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அடுத்தகட்டமாக, பேசின் பிரிட்ஜ் முதல் அரக்கோணம் இடையிலான 67 கி.மீ. ரயில் பாதையில் ரெயில் விபத்து தடுப்பு கருவியை பொருத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரூ.28 கோடியே 61 லட்சம் செலவிலான இந்த திட்டத்தின் ஒப்பந்தம், ‘தால்ஸ் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பேசின் பிரிட்ஜ்-அரக்கோணம் இடையிலான 169 சிக்னல்களில் இந்த கருவியை இந்நிறுவனம் பொருத்த உள்ளது. கருவியை வடிவமைப்பது, சப்ளை செய்வது, பொருத்துவது, ஒப்படைப்பது என அனைத்து பணிகளையும் இந்நிறுவனம் செய்யும். 2015ம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications